Sunday, April 02, 2017

5738 - வழக்கறிஞர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு! சட்ட ஆணைய பரிந்துரை: பார் கவுன்சில் எதிர்ப்பு, செய்தி, 02.04.2017, நன்றி ஐயா. Selvam Palanisamy

வழக்கறிஞர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு!
சட்ட ஆணைய பரிந்துரை: பார் கவுன்சில் எதிர்ப்பு
*******************************************************************
வழக்கறிஞர் சட்டத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வரும்படி, சட்ட ஆணையம் செய்த பரிந்துரைகளுக்கு, பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சவுகான் தலைமையிலான, இந்திய சட்ட ஆணையம், வழக்கறிஞர்கள் சட்டத்தில் பல திருத்தங்களை கொண்டு வரும்படி, மத்திய அரசுக்கு பரிந்துரைகளை அளித்துள்ளது.
அதில் உள்ள, சில முக்கியமான பரிந்துரைகள்:
● 5,000 வழக்கறிஞர்கள் உடைய பார் கவுன்சி லுக்கு, 11; 5,000க்கு மேல், 15 ஆயிரத்துக்குள் இருந்தால், 15; 15 ஆயிரத்துக்கு மேல் இருந்தால், 21 பேர் உறுப்பினர்கள் இருக்க வேண்டும்
● நிர்ணயிக்கப்பட்ட பார் கவுன்சில் உறுப்பினர்களில், பாதி பேர், வழக்கறிஞர்கள் மத்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மீதி உள்ளவர்களில், மூன்றில் ஒரு பங்கினரை, உயர் நீதிமன்றம் நியமிக்கும். மூத்த வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற, மாவட்ட நீதிபதிகளை நியமிக்கலாம்
* மூன்றில் ஒரு பங்கு தவிர்த்து, மீதி எண்ணிக் கையையும், உயர் நீதிமன்றம் நியமிக்கும். வணிகம், கணக்கு பதிவியல், மருத்துவ அறிவியல், நிர்வாகத் துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் இடம்பெறுவர்
* மாநில பார் கவுன்சில் என்றால், வழக்கறிஞர் கள் மீதான புகார்களை விசாரிக்கும் ஒழுங்கு நடவடிக்கை குழுவில், தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள், சட்டம் தவிர்த்து, மற்றத் துறைகளின் நிபுணர்கள் இருவர், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி என, ஐந்து பேர் இடம்பெறுவர்
* இந்திய பார் கவுன்சில் என்றால், ஐந்து பேர் இடம் பெறுவர். அவர்களில் ஒருவர், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது நீதிபதியாக இருக்க வேண்டும்
* வழக்கறிஞர் ஒருவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டாலோ, நீதிமன்றபணிகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணித் தாலோ, நீதிமன்ற செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தினாலோ, அவரை பார் கவுன்சிலில் இருந்து நீக்கலாம்
* வழக்கறிஞரின் ஒழுங்கீனத்தால், ஒருவர் பாதிக் கப்பட்டார் என்றால், பாதிக்கப்பட்ட நபருக்கு இழப் பீடு வழங்கும்படி, வழக்கறிஞருக்கு உத்தரவிட லாம். இழப்பீடு தொகை அதிகபட்சமாக, ஐந்து லட்சம் ரூபாய் வரை விதிக்கலாம்
* வழக்கறிஞருக்கு அபராதமாக, மூன்று லட்சம் ரூபாய் வரை விதிக்கலாம். வழக்கு செலவு தொகையை தரும்படியும் உத்தரவிடலாம்
* எந்த வழக்கறிஞரும், வழக்கறிஞர் சங்கங்களும், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கக் கூடாது.
இந்த பரிந்துரைகளுக்கு, இந்திய பார் கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பார் கவுன்சிலின் அதிகாரங்களை பறிப்பதாகவும், வெளிநபர்களின் தலையீடு அதிகரிக்கும் வகையிலும், பரிந்துரைகள் இருப்பதாக கூறியுள்ளது. இந்த பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதி மன்ற பணிகளில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும், இந்திய பார் கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.
அதிகார பறிப்பு!
புதிய பரிந்துரைகள் குறித்து, பார் கவுன்சில் முன்னாள் நிர்வாகிகள் கூறியதாவது:
சட்டபூர்வ அமைப்பான பார் கவுன்சிலின் அதிகாரங்களை பறிப்பதாகவும், வழக்கறிஞர்களின் குரல் வளையை நெரிப்பதாகவும், இந்த பரிந்துரைகள் உள்ளன.
வழக்கறிஞர் தொழிலில் இல்லாத,3-ம் நபர்கள், பார் கவுன்சில் உறுப்பினர்களாக நியமிக்க பரிந்துரைக் கப்பட்டுள்ளது. அவர்களுக்கும், வழக்கறிஞர்
தொழிலுக்கும்என்ன சம்பந்தம்?
வழக்கறிஞர் களுக்குஅபராதம் விதிக்கவும், நஷ்டஈடு விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை எப்படி ஏற்க முடியும்?
பார் கவுன் சில் தரப்பில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை, சட்ட ஆணையம் பரிசீலிக்க வில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நாளை போராட்டம்!
உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், பார் கவுன்சில் முன்னாள் உறுப்பினருமான வேல்முருகன் கூறும்போது,
''வழக்கறிஞர்கள் சட்டத்தில், புதிய திருத்தங்கள் தேவையில்லை என, 1978ல், சட்ட ஆணையம் தெரிவித்திருந்தது. தற்போதுள்ள பரிந்துரைகள், வழக்கறிஞர்களின் தொழில் சுதந்திரம், கருத்து சுதந்திரத்தை நசுக்கும் விதமாக உள்ளது,'' என்றார்.
தமிழகத்தில், நாளை நீதிமன்ற பணிகளில் வழக்கறிஞர்கள் ஈடுபட வேண்டாம் என, பார் கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர், மோகன கிருஷ்ணன் கூறும்போது, ''மற்ற சங்கங்களின் தலைவர்களுடன், நான் பேசி வருகிறேன். எங்களைப் பொறுத்தவரை, வழக்கறிஞர்களை பாதிக்கும் இந்த பரிந்துரை களை எதிர்க்கிறோம். எங்களின் போராட்டம் குறித்து, விரைவில் அறிவிப்பு வெளிவரும்,'' என்றார்.
- நமது நிருபர் -
நன்றி : தினமலர் நாளிதழ் - 02.04.2017

No comments:

Post a Comment