Sunday, August 09, 2015

2563 - அவினாசி பிரபாகரன் மணல் கொள்ளையர்களால் கொலைவெறியோடு தாக்கப்பட்டது பற்றி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி போட்ட கோர்ட் ஆர்டர் பற்றி, @ முகிலன் 09 -08 - 2015.




அவினாசி பிரபாகரன் மணல் கொள்ளையர்களால் கொலைவெறியோடு தாக்கப்பட்டது பற்றி
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி போட்ட
கோர்ட் ஆர்டர் பற்றி
====================================================
அவினாசி பிரபாகரன் அவர்கள் கடந்த மே மாத இறுதியுள் சட்ட விரோதமாக செயல்படும் மண் கொள்ளையர்களால் கடுமையாக கொலைவெறியோடு தாக்கப்பட்டு, காவல்துறையால் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . பொதுமக்கள் -சமூக ஆர்வலர்களின் போராட்டத்தினால் ஒரே நாளில் காவல்துறை பிரிவுகளை மாற்றி அவரை சொந்த ஜாமீனில் சிறையில் இருந்து விடுவித்தது.
அதன் பின் பல கோரிக்கை அரசுக்கும் , திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவருக்கும், திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மனுக்கள் கொடுத்தும், மக்களை திரட்டி போராடியும், அதிகாரிகள் சில கண்துடைப்பு நடவடிக்கையாக அவனாசி வட்டாட்சியர் இட மாற்றம் , உள்ளூர் கிராம நிர்வாக அலுவலர் இடமாற்றம் , சம்பவம் நடந்து ஒன்னரை மாதம் கழித்து அனுப்பர்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் இடமாற்றம் என செய்து நாடகமாடினார்களோ ஒழிய, கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களான மண் கொள்ளையர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகளும் , அரசும் எடுக்க தயாராக இல்லை.
சொல்லப் போனால் மண் கொள்ளையர்கள் அவினாசி பிரபாகரனுக்கு ஆதரவாக இருப்பவர்களை நேரிலேயே மிரட்டுவது, அவர்களை விலை பேசுவது, என எண்ணற்ற சதிவேலைகளை அதிகாரிகளின் துணையோடு நடத்தி வந்தனர். இது பற்று அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் மண் கொள்ளையர்களுக்கு கூட்டாளிகளாக செயல்பட்டார்களோ ஒழிய, கொடுத்த புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே இதுபற்றி முறையான விசாரணை கோரி அவினாசி பிரபாகரன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் போட்ட கோர்ட் ஆர்டர் இதுதான்.
அ). பிரபாகரனுக்கு ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு அரசு தர வேண்டும்
ஆ). பிரபாகரன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி வரும் 11-08-2015 ஆம் தேதிக்குள் விசாரணை அதிகாரியை நியமித்து அரசு அறிவித்து விசாரணையை தொடங்க வேண்டும் .
தமிழக அரசு தரப்பில் பிரபாகரன் மனுவிற்கு பதில் அளித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அபிடவிட்டில் :
1.திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர் - இனி மேல் காவல்துறை இது போல் பொய் வழக்கு போடாமல் பார்த்துக் கொள்வேன்
2. அனுப்பர்பாளையம் காவல் நிலையம் - நாங்கள் வழக்கையே ரத்து செய்து விட்டோம்
3. அவனாசி வட்டாட்சியர்- மன்னிப்பு கேட்டல்
4. பவானிசாகர் பொதுப்பணித்துறை பொறியாளர் (அதிகாரி) - மன்னிப்பு கேட்டல்
என செய்துள்ளனர் .
இன்னும் அரசுக்கும், நீதிமன்றத்திற்க்கும் நாம் முன் வைக்கும் கோரிக்கை :
=========================================================
1.அவினாசி பிரபாகரன் அவர்களை கட்டிவைத்து கொலைவெறியோடு தாக்கியும் , பத்திரிக்கையாலர்களின் கேமராவை பிடுங்கி வைத்துக் கொண்டு கொலை மிரட்டல செய்த, மண் கொள்ளையர்கள் மீது முறையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செயவதுடன், தேசத்தின் இயற்கை வளங்களை சூரையாடிய கொள்ளையர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் .
2.அவினாசி பிரபாகரன் அவர்கள் நடந்த உண்மைகளை காவல்துறை அதிகாரிகளிடம் கூறியும் அதையும் மீறு மேலிடம் சொல்கிறார்கள் எனக் கூறி அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையுள் அடைத்த, அனுப்பர்பாளையம் காவல்துறை ஆய்வாளர், பொய் வழக்குப் போட தூண்டிய திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் , காவல்துறை இணை ஆணையர் , காவல்துறை துணை ஆணையர் ஆகியோர் மீது பணிநீக்கம் செய்து, துறைரீதியான தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .
3. இன்று இயற்கை வளங்களை கொள்ளையடிப்பவர்கள் நேரடியாக தமிழக முதல்வர், அமைச்சர்கள் பெயரை சொல்லியே தங்களது மண், மணல் உட்பட அனைத்துக் கொள்ளையை நடத்தி வருகிறார்கள். ஒரு அவினாசிபிரபாகரன் மட்டும் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளார். எண்ணற்றோர் பலியாகியுள்ளனர்.
சில நேரங்களில் மணல்குவாரியை எதிர்ப்பவர்களை கூலிப்படை வைத்து கொலை செய்வது, ஆளே இல்லாமல் செய்து விடுவது என்பதும் நடக்கும். இப்படி எண்ணற்ற சாம, பேத, தான, தண்ட முறையிலேதான் போராடும் மக்களையும், போராட்ட தலைவர்களையும், சில நேர்மையான அதிகாரிகளையும் மணல்குவாரி நடத்துபவர்களால் இப்படி கவனிக்கப்படுவார்கள்.இதற்கு பல உதாரணங்கள் உண்டு.
வருவாய்துறை தாசில்தார் காஞ்சிபுரம் வெங்கடேசன் , காவல்துறை ஏட்டு அரக்கோணம் கனகராசு , பல்வேறு சமூக சுற்றுசூழல் ஆர்வலர்கள் மானுர் தனிகாச்சலம், புதுக்கோட்டை கார்த்திக் மற்றும் ராஜேஷ், திசையன்விளை சதீஷ்குமார், திருவைகுண்டம் சாம் தேவசகாயம் போன்ற ஊர்தலைவர்கள், தோழர் நெல்லை வீரவநல்லுர் சுடலைமுத்து போன்ற அரசியல் இயக்கம் சார்ந்தவர்கள் என பலரும் மணல் கொள்ளையை தடுத்ததால் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆட்சியர் சகாயம் போன்றவர்களே மணல்கொள்ளையர்களால் காஞ்சிபுரத்தில் பணியாற்றி வந்த போது கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் தப்பித்த நிகழ்வுகளும் உண்டு.
எனவே, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் கடந்த செப்டெம்பர் -11, 2014 இல் உத்தரவிட்டுள்ள உத்தரவு அடிப்படையில், திரு.சகாயம் இ.ஆ.ப. அவர்கள் மதுரை கிரானைட் முறைகேடு ஆய்வு செய்து அறிக்கை கொடுத்த பின், உடனடியாக தமிழகம் முழுக்க அணைத்து கனிமங்களையும் ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உத்திரவிட வேண்டும் .
இணைப்பு :கோர்ட் ஆர்டர் & அரசு தாக்கல் செய்த அபிடவிட் 27 பக்கம்
@ முகிலன் ,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம் ,
கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கம்.
அலைபேசி : 94436-75048
மின் அஞ்சல் : sagayamaaivukkuzhu@gmail.com
09 -08 - 2015.

No comments:

Post a Comment